×

வைக்கோல் குவிக்கும் பெண் தொழிலாளர்கள் பணியாளர்கள் பற்றாக்குறை அரசு கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்

வேதாரண்யம்,பிப்.7: பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.வேதாரண்யம் தாலுகாவில் இந்த ஆண்டு சம்பாசாகுபடி சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் தலைஞாயிறு பிராந்தியங்கரை மூலக்கரை உள்ளிட்ட ஆற்று பாசன பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் மானாவரியில் மழையை மட்டுமே நம்பி உள்ள ஆயக்காரன்புலம், வாய்மேடு, ஆதனூர், பஞ்சநதிகுளம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் சம்பாசாகுபடி நடைபெற்றது. தற்போது கதிர்கள் முற்றி சம்பா அறுவடை பணி தாலுகா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என நாகை மாவட்டத்தில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. குறிப்பாக ஆற்றுபாசன பகுதியான தலைஞாயிறு பிராந்தியங்கரை, வடமழை, மணக்காடு, தாணிக்கோட்டகம் ஆகிய இடங்களில் அறுவடை செய்த நெல்லை வியபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 30ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

இதனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்ட நாள் முதல் கொள்முதல் நிலையத்தில் தீவிரமாக நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது. இந்த நேரடி கொள்முதல் நிலையம் திறந்தவுடன் ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் போடுவதற்காக கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் திறந்த இரண்டு நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் குவிந்து உள்ளன. பணியாளர்கள் பற்றாக்குறை, சாக்கு தட்டுப்பாடு, இணையதள வசதி சரிவர கிடைக்காததால் நெல் கொள்முதல் செய்யமுடியாமல் நெல்லை அடுக்கி வைத்துள்ளனர். குறைந்தபட்சம் அறுவடைசெய்த நெல்லை விற்க நான்கு நாட்கள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. ஒரே அறுவடை ஆவதால் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் விவசாயிகள் கூடுதலாக இயந்திரத்திற்கு வாடகை கொடுத்து நெல்லை அறுவடை செய்தாலும் நேரடிகொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்கமுடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே நாள் ஒன்றுக்கு அரசு அறிவித்த ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யவேண்டும் மேலும் தாலுகாவில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையத்தையும் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : government procurement center ,
× RELATED அரசு கொள்முதல் நிலையத்தில்...